search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் நள்ளிரவில் விபத்து- அரசு பஸ்சில் சிக்கி 2 வாலிபர்கள் பலி
    X

    திருப்பரங்குன்றத்தில் நள்ளிரவில் விபத்து- அரசு பஸ்சில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

    • திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் படப்படி தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சரவணன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரது மகன் கவுதம் (24). இவர்கள் இருவரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர்.

    நண்பர்களான இவர்கள் நேற்று நள்ளிரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருநகருக்கு சென்றனர். அவர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.

    இதில் சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் தூக்கி வீசப்பட்டு கீழே கிடந்த 2 பேர் மீதும் ஏறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சரவணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×