search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லாவரத்தில் அறையில் பதுக்கி வைத்து விற்பனை- கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது
    X

    பல்லாவரத்தில் அறையில் பதுக்கி வைத்து விற்பனை- கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது

    • தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்த்த பிரகாஷ், விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிந்தது. கல்லூரி மாணவர்களான இவர்களில் பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டப்படிப்பு (எல்.எல்.பி) படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.

    நண்பர்களாக இருக்கும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் பிரகாஷ், நசீர்பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 12 கிலோ கஞ்சா சிக்கியது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் 25 பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×