

நல்லம்பள்ளி:
கேரளா மாநிலத்தில் இருந்து கோவை, ஈரோடு, நாமக்கல் சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் கேமராக்கள் மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இண்டூர் பகுதியில் தூக்கனாம்பள்ளம், பள்ளப்பட்டி, பாலவாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலத்தில் கெயில் நிறுவன ஊழியர்கள் கேமராக்கள் மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பாலவாடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலத்தில் அளவீடு செய்த போது விவசாயிகள் கடும் எதிப்பு தெரிவித்தனர். இதனால் நிலத்தை அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நல்லம்பள்ளி துணை தாசில்தார் காமராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன், சக்திவேல் மற்றும் இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் இண்டூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.