

தஞ்சாவூர்:
தஞ்சையில் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலை பகுதியில் நேற்று முன்தினம் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த அபுபக்கர் (வயது 46), டவுன் கரம்பையை சேர்ந்த செல்வகுமார் (46), முள்ளுக்கார தெருவை சேர்ந்த கலையரசன்(32), பாலோபநந்தவனம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(42) ஆகியோர் என்பதும், அவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.