

திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் பதுங்கி இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜ் மணவாளநகர் சப்இன்ஸ்பெக்டர் கணேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் சக்திவேல், மப்பேடு சப்இன்ஸ்பெக்டர் இளங்கோ, புல்லரம்பாக்கம் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது திருமண மண்டபத்தில் உள்ள அறையில் பதுங்கி இருந்த 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாகத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் திருநின்றவூர், திருவெங்கடம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் (எ) தேவகுமார் (35), புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன் பிரபு (23), புது இருளன்சேரி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த அபினாஷ் (19), நயப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30), மப்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு (27) என்பது தெரியவந்தது.
அவர்கள் எதற்காக இங்கு வந்தனர். யாரையேனும் கொலை செய்ய திட்டம் தீட்டினார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.