search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்: நாட்டு வெடிகுண்டு வீச்சு
    X

    நடுக்கடலில் மீனவர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி.

    கூடங்குளம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்: நாட்டு வெடிகுண்டு வீச்சு

    • சின்ன முட்டம் மீனவர்கள் ஒரு வீடியோவை கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீசாரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.
    • புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் கடலோர காவல்படை போலீசாருக்கும் மீனவர்கள் மனு அளித்தனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த சமாதானராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். அந்த விசைப்படகை முட்டத்தை சேர்ந்த கிறிஸ்டி என்பவர் ஓட்டினார்.

    நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அதனை அறிந்த இடிந்த கரை மீனவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் 12 நாட்டுப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்கள், சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

    அந்த பகுதியில் தாங்கள் மீன்பிடிக்க வலை விரித்து வைத்திருப்பதாகவும், சின்னமுட்டம் மீனவர்களால் அந்த வலைகள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதாகவும் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சின்ன முட்டம் மீனவர்கள் ஒரு வீடியோவை கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீசாரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.

    அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் கடலோர காவல்படை போலீசாருக்கும் மீனவர்கள் மனு அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நவீன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களான ஜெனிகர், சிபி, பீட்டர், ஆனந்த், சைல்ஸ், ராயப்பன், வளன் மற்றும் பெயர் தெரியாத 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இடிந்தகரை மீனவர்களும் கூடங்குளம் கடலோர காவல்படை போலீசில் சின்னமுட்டம் மீனவர்கள் மீது ஒரு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×