

ராயபுரம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேட்டில் மீன்கள் வாங்க அசைவப் பிரியர்கள் எராளமானோர் குவிந்தனர். ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று இருந்த விசைப்படகுகள் அதிக அளவில் கரை திரும்பின. இதனால் மீன் வரத்து அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 40டன்னுக்கு மேல் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதனால் மீன்களின் விலை பாதியாக குறைந்தது. கடந்த பல மாதங்களாக கொரோனா தொற்று, மானிய விலை டீசல் உயர்வு, மழை பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால் பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்களே மீன் பிடிக்க சென்று வந்தனர்.
தற்போது நோய் பாதிப்பு பரவல் மற்றும் கட்டுபாடுகள் குறைந்து உள்ளதால் அதிக அளவில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து திரும்பி வருகிறது. இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைவாக காணப்பட்டது. அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.
வரும் நாட்களிலும் 50 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்வருமாறு:- வஞ்சிரம் ரூ.600 முதல் 900 வரை, வவ்வால்ரூ.400, பெரியவகை சங்கரா ரூ.250, கவலை ரூ.50, டைகர் வகை இறால் ரூ.800, சாதாரண இறால் ரூ.300, நண்டு ரூ.250.