search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது
    X

    2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது

    • சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.
    • சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 29 வயது மருத்துவ பிரதிநிதிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 வயது சிறுமி நீண்டநேரமாக அழுதுகொண்டே இருந்து உள்ளது. இதை பார்த்த தாய் அந்த குழந்தையிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்று கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த குழந்தை இல்லை என்று தலையை ஆட்டியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். இதையடுத்து அந்த தாய், குழந்தையை பரிசோதனை செய்த போது காயம் இருந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த குழந்தை வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தந்தையே தனது 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். கோவையில் 2 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×