search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் பணம், நகை ஏமாற்றிய போலி சாமியாருக்கு தர்ம அடி
    X

    மத்தூர் பேருந்து நிலையத்தில் போலி சாமியாரால் ஏமாற்றப்பட்ட நளினியின் உறவினர்கள் போலி சாமியாரை தாக்கிய காட்சி.

    தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் பணம், நகை ஏமாற்றிய போலி சாமியாருக்கு தர்ம அடி

    • திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த, நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (வயது45). இவர் நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் நளினி வீடு வழியே சென்ற சாமியார் ஒருவர் நளினியிடம் வீட்டில் யாரோ செய்வினை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஏமாந்து போன நளினி செய்வினை எடுக்க வேண்டும். ஆடு பலியிட வேண்டும் என பலவற்றை கூறி மூளை சலவை செய்துள்ளார்.

    இதனால் கடந்த 6 மாதங்களாக சிறுக, சிறுக சேர்த்து வைத்த ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் மற்றும் நகைகளை அந்த போலி சாமியாரிடம் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட போலி சாமியார் தொடர்ந்து தோஷம் கழிக்க வேண்டும் என பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும் நளினியின் வீட்டில் கஷ்டம் தீர்ந்தபாடில்லை. சாமியாரை தொடர்பு கொண்டு கேட்க போன் செய்த போதெல்லாம் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நளினியை தொடர்பு கொண்ட போலி சாமியார் சிறப்பு பூஜை ஒன்று செய்ய வேண்டும். அதற்காக ஆடு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வேண்டுமென்பதால், உடனடியாக ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மத்தூர் பேருந்து நிலையம் வரவேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த தகவல் அறிந்த நளினியின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் நேற்று மத்தூரில் பணத்துக்காக காத்திருந்த போலி சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலி சாமியார் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த, செங்குட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பது தெரிய வந்தது.

    இவர் இதே போல் பல பெண்களை சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமத்தில் ஏமாற்றி பணம் பறித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது சொந்த காரில் சென்று கிராமத்தின் வெளியே காரை நிறுத்திவிட்டு கிராமத்தினுள் நடந்து சென்று குடும்ப பெண்களிடம் தோஷம் இருப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றுவதும் தெரிய வந்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×