search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம்: அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கூச்சல்-குழப்பம் நிலவியது
    X

    எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம்: அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கூச்சல்-குழப்பம் நிலவியது

    • எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
    • வெங்கல் பஜார் தெருவில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருட்களை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் வாசித்தார்.

    கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோடுவெளிகுழந்தைவேலு, திருக்கண்டலம் ரவி, திருமலை சிவசங்கர், சிவாஜி உள்ளிட்டோர் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒன்றிய குழு கூட்டத்திற்கு வருவதில்லை. இதனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற செயலாக இக்கூட்டத்தில் நாங்கள் கூறும் குறைகள் நிவர்த்தி ஆகாமல் உள்ளது. என்று கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. மேலும், கோடுவெளி ஊராட்சியில் ஒன்றரை ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்பொழுது திறப்பார்கள். அலமாதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மாநகரப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஸ் நிறுத்தத்தில் இருந்து தள்ளி நிறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி பஸ்ஸில் ஏற புத்தகப் பையுடன் ஓடியதால் கீழே விழுந்து இரண்டு பற்கள் உடைந்தது அதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகரல் ஊராட்சியில் உள்ள சுய உதவி குழு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதனை அகற்ற வேண்டும். ராமாபுரம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை அகற்ற வேண்டும். திருக்கண்டலம் முதல் பூச்சி அத்திப்பேடு வரையில் உள்ள ஒன்றியச் சாலையை மேம்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு இந்த சாலையை ஒப்படைக்க வேண்டும்.

    வெங்கல் பஜார் தெருவில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒதுக்குப்புறமாக குப்பைத் தொட்டியை அமைக்க வேண்டும். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காரணிபாட்டை, லட்சுமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும். அல்லது ரிப்லேக்ட்டர்கள் அமைக்க வேண்டும். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தீர்க்க வேண்டும், மேட்டுப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரந்தர பட்டாவாக மாற்றி தந்தால் தான் அரசு திட்டங்கள் பெற அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், கூட்ட அரங்கத்தில் தேசிய தலைவர்களின் படம் இல்லை. எனவே உடனடியாக தேசத் தலைவர்களின் படங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் ரூ.ஒரு கோடியே 14 லட்சம் செலவில் 26 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×