நகராட்சி-பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு 26-ந்தேதி மறைமுக தேர்தல்- தேர்தல் ஆணையர் ஆலோசனை

மறைமுகத் தேர்தல்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பது, மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
Published on

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் சி.சி.டி.வி. பதிவு மற்றும் போலீஸ் பாதுகாப்போடு அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் செயலாளர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மறைமுக தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடத்தப்படாமல் உள்ள தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு இவ்வாணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் மற்றும் தேர்தல் பார்வையாளரை நியமனம் செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மறைமுகத் தேர்தல்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பது, மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாளை (23-ந்தேதி) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அமைதியாக நடத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) நடைபெற உள்ள வார்டு குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் மற்றும் 31-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ள வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் நிலைக் குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் சி.சி.டி.வி. பதிவு, காவல்துறையினரின் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதை உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com