தி.மு.க. மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர்- முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி

இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.உள்ளூர் மக்களின் ஆதரவு தி.மு.க.விற்கு இல்லை.
தி.மு.க. மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர்- முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி
Published on

ஈரோடு:

ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து மக்களை சந்தித்து வருகிறோம். இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதற்கு தி.மு.க.வின் கடந்த 22 மாத ஆட்சி தான் காரணம். சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் , பால் விலை உள்ளிட்ட வரிகளையும், கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். தனி நபர் வருமானம் கூடவில்லை. ஆனால் விலைவாசி விண்ணை முட்டுகிறது.

மக்களின் வேதனை இந்த தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. எதை சொல்லி வாக்கு கேட்பார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. மக்களை சந்தித்து பேச தயங்குகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் செய்து காட்டிய நலத்திட்டங்களை சுட்டி காட்டி வாக்கு சேகரிக்கிறோம். இரட்டை இலை வெற்றி பெறுவது உறுதி.

மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் செல்வாக்கு எங்களுக்கு கூடினால் அதை தடுக்க எந்த வழியையும் கடைபிடிப்பார்கள். அது தி.மு.வின் கைவந்த கலை. மக்களின் ஆதரவு பெருகுவதை தடுப்பார்கள். மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.

நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக ஆயிரகணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மக்களின் ஆதரவு தி.மு.க.விற்கு இல்லை. இந்த ஆட்சியின் மீது வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com