search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டி கொலை
    X

    வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டி கொலை

    • ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார்.
    • அரசியல் முன்விரோதத்தால் புதுவை கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர். அவரது மனைவி சரஸ்வதி. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்.

    தினசரி அதிகாலை நேரத்தில் ஜெயக்குமார் டீ குடிப்பதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு வருவதுண்டு. அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிளில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரும்பை மகாலீசுவரர் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர்.

    அந்த கும்பல் கையில் கத்தி மற்றும் அரிவாள் வைத்திருந்தனர். அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள ஏரிகரைக்கு ஓடினார்.

    உஷாரான அந்த கும்பல் ஜெயக்குமாரை விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார். இந்த செய்தி கோட்டக்கரை கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. சிறிது நேரத்தில் கிராம மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மோப்பநாய் சிருஷ்டி வரவழைக்கப்பட்டது. அது மகாலீசுவரர் கோவிலை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அந்த பகுதியில் செல்வாக்கானவர். இதனால் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஜெயக்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் எதற்காக கொலை செய்தனர். அரசியல் முன்விரோதத்தால் புதுவை கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×