தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அரபிக்கடலில் புயல் உருவானதை குறிக்கும் வகையில் தூத்துக்குடி வ. உ .சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டானது ஏற்றுப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபி கடலில் புயலாக உருவாகியுள்ள புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

தூத்துக்குடி:

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், கடந்த 19-ந் தேதி காலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபி கடலில் புயலாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு 'தேஜ்' அதிதீவிர புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபி கடலில் சகோத்ரா ஏமன் நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா ஓமன் நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா ஏமன் நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் புயல் அதிக வலுப்பெறும். இன்று மதியம் புயல் இன்னும் அதிக வலுப்பெற கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் அரபிக்கடலில் புயல் உருவானதை குறிக்கும் வகையில் தூத்துக்குடி வ. உ .சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டானது ஏற்றுப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நாட்டுப்படகுகளும், மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com