உல்லாசத்துக்கு அழைத்து வாலிபர்களை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

கடந்த 6 மாதத்தில் கல்லூரி மாணவர்கள் ரூ.4 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
உல்லாசத்துக்கு அழைத்து வாலிபர்களை மிரட்டி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர்.

அந்த புகாரில் 2 இணையதள முகவரியில் ஒரு செல்போன் எண் பதிவாகி இருந்தது. அதில் உல்லாசமாக இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாங்கள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோம். முதலில் எங்களது அழைப்பை எடுக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் நீங்கள் எங்களை உல்லாசத்துக்கு அழைத்தீர்கள் என்று கூறி எங்களை மிரட்டினார்கள். மேலும் உங்கள் மீது போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்று கூறினார்கள். மேலும் போலீசில் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதையடுத்து பயந்து போன நாங்கள் அவர்களுக்கு பணத்தை செலுத்தினோம். மறுநாள் வேறு ஒரு நம்பரில் இருந்து நாங்கள் போலீசார் பேசுகிறோம் உங்கள் மீது ஒரு புகார் வந்து உள்ளது. எனவே பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதை உண்மை என்று நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.85 ஆயிரத்தை செலுத்தினோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று போலீசார் செல்போன் எண்ணை கைப்பற்றினர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் கோவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் வேறு ஒருவரின் பெயரில் போலியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் 2 இணையதள முகவரியில் செல்போன் எண்களை பதிவிட்டு உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

இதை உண்மை என நம்பி இந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்பவர்களை போலீசில் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பறித்தது தெரிய வந்தது.

கடந்த 6 மாதத்தில் இவர்கள் ரூ.4 லட்சம் வரை இதுபோல் பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இவர்கள் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com