

போரூர்:
மதுரவாயல் சத்யமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஆண்டு திருவள்ளூர் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் "இன்ஸ்டாகிராம்" மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக தெரிகிறது.
மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அடிக்கடி மிரட்டி ஜார்ஜ் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மாணவியிடம் இருந்து அடிக்கடி பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை அறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கண்ணகி விசாரணை நடத்தியபோது கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜ், கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவியிடம் கூறி ரூ.15ஆயிரம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து மாணவி தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தபோது தான் கல்லூரி மாணவர் ஜார்ஜ்வுடன் மகளுக்கு பழக்கம் ஏற்பட்டதும் இதை பயன்படுத்தி அடிக்கடி வீட்டுக்கு வந்து அவர் மகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதன் உச்சகட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு வந்த ஜார்ஜ், மாணவியிடம் அவரது தாயின் கண் முன்னே தகாத முறையில் நடந்துள்ளார். இதை தட்டிக் கேட்ட மாணவியின் தாய்க்கு அவர் மிரட்டல் விடுத்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவர் ஜார்ஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.