நாங்குநேரியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து நாகர்கோவில் பெண் பலி

கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து நாகர்கோவில் பெண் பலி
Published on

நெல்லை:

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடை கோட்டார் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது44). இவரது மனைவி பவினா (42). இவர்களுக்கு அப்ரா (21) என்ற மகளும், அப்துல்லாகான் (19) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் நேற்று நெல்லைக்கு காரில் வந்திருந்தனர். பின்னர் இரவில் மீண்டும் அவர்கள் 4 பேரும் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காரை அப்துல்லாகான் ஓட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி டோல்கேட்டை கடந்து தனியார் உணவகம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் சென்ற வேகத்தில் கவிழ்ந்து பின்னர் நேராக மாறியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், பவினா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவினாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பவினா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com