search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் தொழில் அதிபர் தற்கொலை- தொழிலில் நஷ்டம் காரணமாக விபரீத முடிவு
    X

    ஈரோட்டில் தொழில் அதிபர் தற்கொலை- தொழிலில் நஷ்டம் காரணமாக விபரீத முடிவு

    • கடந்த சில நாட்களாகவே முத்துகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த சாந்தாங்காடு பகுதியில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நின்று கொண்டிருந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் குறித்து அடையாளம் தெரியவந்தது.

    திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (37). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முத்துகிருஷ்ணன் திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி வைத்திருந்தார். ஆனால் தொழில் நஷ்டம் காரணமாக பனியன் கம்பெனியை மூடிவிட்டார்.

    அதன் பின்னர் கடந்த 6 மாதமாக திருப்பூரில் சாதாரண கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். எனினும் தொழில் நஷ்டம் மற்றும் இதன் காரணமாக கடனும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஈரோடுக்கு வந்துள்ளார். பின்னர் இரவு வீரப்பன்சத்திரம் அடுத்த சாந்தாங்காடு பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் அந்த பகுதியில் வீடு கட்டும் கட்டிட பணி நடந்து வருகிறது. அந்த கட்டிடம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து இருந்துள்ளார். திடீரென அவர் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் அவரது மோட்டார் சைக்கிளில் தற்கொலை செய்வதற்காக கயிறு கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தான் வந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகுதான் முத்துகிருஷ்ணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற முழு விவரமும் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×