விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்

எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார்.சாலையில் கிடந்த அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார்.
கைதான காதலன் பார்த்திபன்
கைதான காதலன் பார்த்திபன்
Published on

செந்துறை:

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (23). தந்தை இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்றவும், வறுமை காரணமாகவும் இவர் தற்போது அரியலூரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். ஆனால் அபிநயா வீட்டுக்கு செல்லவில்லை.

இதற்கிடையே நேற்று காலை உடையார்பாளையம் அருகே சாலையோரத்தில் அவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பார்த்திபன் (வயது 33). டிப்ளமோ படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா தஞ்சாவூருக்கு வேலைக்கு சென்றுவந்தபோது, பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஒருசில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.

ஆனாலும் எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய அபிநயாவும் காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இதற்கிடையே பார்த்திபனுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயித்தனர். அதன்படி பார்த்திபனுக்கு வருகிற 6-ந்தேதி பந்தநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனை அறிந்த அபிநயா அதிர்ச்சி அடைந்தார். உடனே பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் பகுதிக்கு தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த பார்த்திபனை அபிநயா நேரில் சந்தித்துள்ளார். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதில் பார்த்திபனுக்கு பின்னந்தலையிலும், அபிநயாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த சமயம் விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் பார்த்திபன் மட்டும் அங்கிருந்து தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு பந்தநல்லூர் சென்றுவிட்டார்.

அத்துடன் சாலையில் கிடந்த அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அபிநயாவை மீட்கவும், அவருக்கு சிகிச்சை அளிக்கவும் பார்த்திபன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அபிநயா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். மேற்கண்ட தகவலை பார்த்திபன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து சென்ற உடையார்பாளையம் போலீசார் அபிநயாவின் உடலை கைப்பற்றி நடத்திய முதல்கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன.

உண்மையிலேயே விபத்தில் ஏற்பட்ட காயத்தால் தான் அபிநயா உயிரிழந்தாரா அல்லது தனது திருமணத்திற்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக காதலியை நேரில் வரவழைத்து அவரை கொலை செய்துவிட்டு பார்த்திபன் நாடகம் ஆடுகிறாரா? என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் சென்ற உடையார்பாளையம் போலீசார் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் சாலையோரம் வீசிச்சென்ற பார்த்திபனை கைது செய்தனர்.

மேலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உடையார்பாளையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com