search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல்

    • கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மணி என்ற வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மணி வீட்டில் இருந்து வைகை வடகரை பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அருள்தாஸ்புரம் வைகை ஆற்றங்கரை பகுதியில் மணி நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே அந்த கும்பல் துரத்தி சென்று மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இன்று அதிகாலை அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×