ஒட்டப்பிடாரம் அருகே தம்பியை குத்திக்கொன்ற ராணுவ வீரர்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பெற்றோர் பணம் தராததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர், தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை
கொலை
Published on

ஒட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமண 

பெருமாள். இவருக்கு செல்வக்குமார்(வயது 24), கார்த்தி(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

செல்வக்குமாருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியின் ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கார்த்தி ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலினி(22) என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். சமீபகாலமாக கார்த்திக்குக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே அவரது தாயாரும் தன்னிடம் இருந்த நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அறிந்த செல்வக்குமார், தனக்கும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், கார்த்தி பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்ததால் கொடுத்தோம் என்று கூறி உள்ளனர். ஆனாலும் செல்வக்குமார் அடிக்கடி பணத்தை கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார், நேற்று இரவு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு லெட்சுமண பெருமாள் மற்றும் கார்த்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்தியை செல்வக்குமார் குத்தினார். இதில் கார்த்தியின் மார்பில் கத்திக்குத்து விழுந்தது.

உடனே அருகில் நின்று கொண்டிருந்த அவரது உறவினர் கண்ணன், தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சரிந்து விழுந்த கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்த்தியின் மனைவி மாலினி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com