search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகி மனைவியுடன் தற்கொலை: கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்தனர்
    X

    அ.தி.மு.க. நிர்வாகி மனைவியுடன் தற்கொலை: கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்தனர்

    • பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
    • பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (48). இவரது மனைவி சரிதா (42).

    அ.தி.மு.க.வில் அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராக பிரகாஷ் இருந்து வந்தார்.

    பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் பிரகாஷ்-சரிதா தம்பதி, நேற்று முன்தினம் இரு கடிதம் மற்றும் வீடியோ பதிவை தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு மொபைல் மூலம் அனுப்பினர். பிறகு அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சரிதா தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சில தகவல்கள் தெரிய வந்தன.

    பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ரூ.100-க்கு ரூ.10 என்கிற வீதம் மாதம் தோறும் ரூ.11 ஆயிரத்தை வட்டியாக பிரகாஷ் செலுத்தி வந்துள்ளார்.

    இச்சூழலில் கொரோனா காலத்தில் தொழில் முடங்கியதால் வட்டி செலுத்த முடியாமல் இருந்து வந்த பிரகாசுக்கு பல வகையில் நெருக்கடியை கொடுத்து வந்த ராஜா, ஒரு கட்டத்தில் ரவுடிகள் மூலம் மொபைல் போனில் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன பிரகாஷ்-சரிதா தம்பதி நேற்று முன்தினம் பணத்துக்காக உறவினர்கள், நண்பர்களை நாடியுள்ளனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து தம்பதியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவான ராஜாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×