search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 6 பேர் பலி
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 6 பேர் பலி

    • ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பெரியகடை தெரு அருகே வந்த ஒரு டிராக்டர் பாபுஜி என்பவரது பெட்டிக்கடையில் மோதியது.
    • டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் நாகபட்டினம் கீழையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாய்க்கரைவாடி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் ஜீவா (வயது 20), மாடசாமி மகன் மணி வேலன் (18), ரவி மகன் ரோசான் (18) ஆகிய 3 பேரும் நேற்று கீழக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது அந்த வழியாக ஒரு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜீவா, மணி வேலன் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோசான் மீட்கப்பட்டு அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து திருச்சி எம்.கே.கோட்டையை சேர்ந்த வேன் டிரைவர் முகமது நிஷாருதீன் (29) என்பவரை கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (20). இவரது உறவினர் வெற்றிவீரன் (27). அவரது நண்பர் முகமது ராஜா (18) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் உள்ள கடையில் பலகாரம் வாங்கினர்.

    பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கொத்தங்குளம் பெருமாள் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை ஓட்டி வந்த மேல கிடாரத்தைச் சேர்ந்த முகேஷ் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பெரியகடை தெரு அருகே வந்த ஒரு டிராக்டர் பாபுஜி என்பவரது பெட்டிக்கடையில் மோதியது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் நாகபட்டினம் கீழையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (27) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×