உடுமலையில் இரிடியம் மோசடி விவகாரத்தில் இரு தரப்பினர் மோதல்- 4 பேர் கைது

உடுமலையில் இரிடியம் மோசடி விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த பழக்கடை சிவா, செந்தில், பழனிசாமி, சேகர் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரியாஸ் (24) என்பவரை அணுகினர். அப்போது அவரிடம் தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைத்திருந்தால் பணம் கொழிக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதனை நம்பிய ரியாஸ் இரிடியத்தை வாங்க முன்வந்துள்ளார். அதற்கு முன் பணமாக ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று 4 பேரும் கேட்டுள்ளனர். இதையடுத்து ரியாசும் முன்பணமாக ரூ.2லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் 4 பேரும் ரியாசுக்கு இரிடியத்தை கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரியாஸ் தனது நண்பர்களான தேனியை சேர்ந்த வினீத் , இஸ்மாயில்(35), கதிரேசன் (28) ஆகியோர் உடுமலையில் உள்ள பழக்கடை சிவா வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த சிவா மற்றும் 3 பேரிடம் இரிடியத்தை உடனே தரும்படி கேட்டுள்ளனர்.

அப்போது சிவா இரிடியம் பூஜையில் இருப்பதாகவும், அது மட்டுமின்றி மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிவா மற்றும் அவரது நண்பர்கள் மீது மிளகாய் பொடியை தூவியதுடன் கத்தியை காட்டி மிரட்டி சிவா வீட்டில் இருந்த இரிடியத்தை எடுத்து சென்றனர்.

இது குறித்து இரு தரப்பினரும் உடுமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இஸ்மாயில், கதிரேசன், சிவா, சேகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மற்ற 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் , உடுமலை டி.எஸ்.பி. தேன்மொழிவேல் உத்தரவின்பேரில் 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com