

மதுரை:
மதுரை கோட்டத்தில் நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் அதிகரித்து உள்ளது. இங்கிருந்து நிலக்கரி, உரம், சுண்ணாம்புக்கல், கருவேலங்கரி, ஜிப்சம் ஆகியவை 3,166 சரக்கு பெட்டிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.20.18 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
இது கடந்த நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.3.12 கோடி அதிகம். அப்போது மதுரை கோட்டத்தில் 2,478 சரக்கு பெட்டிகள் மட்டுமே இயக்கப்பட்டன.
மதுரை கோட்ட வணிக வளர்ச்சி குழுவின் முயற்சி காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பொட்டாசியம் உரம் விஜயவாடாவை அடுத்த கோவூருக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் ரூ.35 லட்சம் வருமானம் கிடைத்தது.
தென்னக ரெயில்வே அளவில் கடந்த மாதம் ரூ.283.36 கோடி வருமானம் கிடைத்தது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகம். நிலக்கரி, உணவு பொருட்கள், சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள், உரம் ஆகியவற்றின் போக்குவரத்து, கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 24, 46, 27, 21, 14 சதவீதம் அதிகமாகி உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.