

சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து ஈரோட்டுக்கு குட்கா கடத்தி வரப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பண்ணாரி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தினர். வேனில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் கொள்ளேகாலில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து குட்கா கடத்தி வந்த ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (32), நம்பியூரை சேர்ந்த சக்திவேல் (27), கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கோபால் (26), சங்கர் (24) ஆகிய 4 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் குட்கா, வேனையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.