search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே குவாரியில் பாறை சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
    X

    பெரம்பலூர் அருகே குவாரியில் பாறை சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

    • இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது.
    • உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது கவுல்பாளையம் கிராமம். பெரம்பலூர் நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள், தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகளுக்கு அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்காக ஆண், பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக கல் குவாரியில் பாறைகளை உடைத்து ஜல்லி கற்களாக மாற்றும் பணியில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே கவுல்பாளையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான பணிகள் தொடங்கின. இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இதில் சில பொக்லைன் எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    அப்போது வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அதன் அருகிலேயே தொழிலாளர்களும் பணியில் இருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.

    உடனடியாக அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த குவாரி ஊழியர்கள், தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மேலும் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதற்குள் இந்த கோர விபத்தில் கவுல்பாளையம் காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (வயது 30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.

    தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதே விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து குவாரிக்கு வந்தனர். அவர்கள் பலியான இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

    Next Story
    ×