திருத்தணி அருகே காரில் கடத்தி வந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல்

திருத்தணி அருகே காரில் கடத்தி வந்த 2 டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்
Published on

திருவள்ளூர்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக செம்மரகட்டைகள் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கார் திடீரென போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் காரை விரட்டி சென்றனர். திடீரென அந்த கார் சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனே காரை அங்கேயே நிறுத்தி விட்டு அதில் இருந்த மர்மகும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் காரை சோதனை செய்த போது அதில் சுமார் 2 டன் எடையுள்ள 60 செம்மரக் கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காருடன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து காரின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com