search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூரில் தனியார் வங்கியில் 18 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    அன்னூரில் தனியார் வங்கியில் 18 பவுன் நகை-பணம் கொள்ளை

    • வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • நள்ளிரவில் மர்மநபர் முகத்தை துணியால் மூடியபடி வங்கியை திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    கடந்த 20-ந்தேதி வங்கியில் வழக்கமான பணிகள் நடந்தது. மாலையில் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடி விட்டுச் சென்றனர்.

    நேற்று காலை வங்கி மேலாளரான சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 32) என்பவர் வங்கியை திறக்க வந்தார். அப்போது வங்கியின் பூட்டு திறந்து இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரும் திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் ரொக்கப்பணமும், 18 பவுன் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து மேலாளர் சுபாஷ்சந்திர போஸ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வங்கிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வங்கியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் மர்மநபர் முகத்தை துணியால் மூடியபடி வங்கியை திறந்து கொண்டு உள்ளே செல்கிறார். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளியே செல்கிறார்.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளையன் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வங்கியின் சாவி மேலாளர் மற்றும் அக்கவுண்டன்ட் ஒருவரிடம் மட்டுமே இருந்துள்ளது. கொள்ளையடித்த நபர் பூட்டை உடைக்காமல் சாவியை வைத்து பூட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனால் அந்த நபரிடம் சாவி எப்படி சென்றது, கள்ளச்சாவி போட்டு அந்த நபர் திருடிச்சென்றாரா அல்லது வேறு எதுவும் மர்மம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×