

திருத்தணி:
ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தலைமையிலான ரெயில்வே போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 5.30 மணியளவில் திருத்தணி ரெயில் நிலையத்தில் நின்ற காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ரெயிலின் கழிவறையில் இரண்டு பைகளில் 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொளத்தூர் ராகவேந்திரா நகர் மெயின்ரோட்டில் உள்ள மளிகை கடையில் கஞ்சா விற்ற மோகன்லால் என்பவரை கொரொட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்தார்.
அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இளைஞர்களை குறிவைத்து அவர் கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.