

ராயபுரம்:
ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் தனியார் நிதி நிறுவனத்தில் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடமானமும், லாக்கரிலும் வைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆல்பின் என்ற வாடிக்கையாளர் தனது 101 பவுன் நகையை நிதி நிறுவனத்தின் லாக்கரில் வைத்து இருந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் மேலாளராக பொன்னுசாமி என்பவர் இருந்தார்.
இந்தநிலையில் நிதி நிறுவனத்தின் புதிய மேலாளராக நாராயண மூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் நிதி நிறுவனத்தில் உள்ள கணக்குகளை சரிபார்த்தார்.
அப்போது வாடிக்கையாளர் ஆல்பின் லாக்கரில் வைத்திருந்த 101 பவுன் நகையை முன்னாள் மேலாளர் பொன்னுசாமி மற்றும் 8 ஊழியர்கள் சேர்ந்து கையாடல் செய்திருப்பது தெரிந்தது.
அந்த நகைகளை போலி ஆவணங்கள் தயார் செய்து வெவ்வேறு பெயர்களில் அதே நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.29 லட்சம் எடுத்து கையாடல் செய்து இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மேலாளர் நாராணமூர்த்தி காசிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் நிதி நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் பொன்னுசாமி மற்றும் 8 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.