வேப்ப மரத்தில் தூரி கட்டி விளையாடியபோது கழுத்தில் கயிறு இறுக்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் பகுதியில் வேப்ப மரத்தில் தூரி கட்டி விளையாடியபோது கழுத்தில் கயிறு இறுக்கி 3-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மரணம்
மரணம்
Published on

சென்னிமலை:

பீகார் மாநிலம் ஜாஜா பகுதியை சேர்ந்தவர் ஜனதாகுமார் (28). இவரது மனைவி நிக்கிதேவி. இவர்கள் கடந்த 5 வருடங்களாக ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு பியூஷ்குமார் (12), ராஜாகுமார் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருமே அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

நேற்று மாணவர்கள் பியூஷ்குமார், ராஜாகுமார் ஆகியோர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். இவர்களது பெற்றோர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பியூஷ்குமாரும், ராஜாகுமாரும் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வேப்பமரத்தில் கயிற்றில் தூரி கட்டி விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ராஜாகுமார் தனது கழுத்தில் கயிற்றை போட்டு குதித்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியது. இதில் ராஜாகுமார் மயங்கி கீழே விழுந்துள்ளான்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ராஜாகுமாரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் ராஜாகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com