search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும் - பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
    X

    தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்த போது எடுத்த படம்.

    பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும் - பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

    • உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.
    • திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அன்றாடம் ஒரு சட்டம், புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவைகள் விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் அங்காடி மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.‌ இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதோ என அச்சம் எழுகிறது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மூத்த வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

    பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே அரசை நம்பி கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.‌ இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    கல்லணை கட்டுமானத்துக்காக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறோம். அதே வேளையில் கல்லணைக்கு யுனெஸ்கோ விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×