பாளை மத்தியச்சிறையில் திடீர் சாவு- விசாரணை கைதி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்கச்சாமி
தங்கச்சாமி
Published on

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

திடீர் சாவு

தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவி த்தொகை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை ஆர்.டி.ஓ. மேற்கொண்டார். மேலும் தங்கச்சாமியின் குடும்பத்தி னருக்கு அரசு நிவாரண தொகை கிடைக்க செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கச்சாமி உடலை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர்.

இதற்கிடையே இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள தங்கச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com