search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் குடமுழுக்கு விழா
    X

    சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று காலை குடமுழுக்கு நடந்தது.

    தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் குடமுழுக்கு விழா

    • இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் நடைபெற்றன.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி சிவகங்கை பூங்காவில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அன்றைய தினம் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கின. தொடர்ந்து, 1-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

    இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்பருஷாஹூதி, திரவ்யாஹூதி, பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு சாவடி காமாட்சி அம்மன், விநாயகர் சன்னதி கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன. அதன்பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மேள வாத்தியங்களுடன் ராஜகோபுர விமானத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் பின்னர் ராஜகோபுரத்தில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுப்பிரமணியர் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதையடுத்து மகா அபிஷேகம் செய்யப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் கவிதா, துணை ஆணையர் சூரியநாராயணன், செயல் அலுவலர் அய்யம்மாள், தக்கார் உமாமகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நிலமேகம், மேயர் சண்.ராமநாதன், கீழவாசல் தி.மு.க. பகுதி செயலாளர் நீலகண்டன், விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம் கவுன்சிலர் கண்ணுக்குஇனியாள்,

    தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு துணை தலைவர் கோவிந்தராஜ், அ.ம.மு.க. பூக்கார பகுதி செயலாளர் செந்தில்குமார், தஞ்சை தொகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் எம்.எஸ். வசந்த், அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், கோட்டை பகுதி செயலாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் அமைந்துள்ள பகுதிகளில் ஆங்காங்கே தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானம், உணவு பொட்டலங்கள் வழங்கினர்.

    தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    Next Story
    ×