

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ள வனத்தாம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகள் சஞ்சனா (வயது8). சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று தனது தோழிகளுடன் அருகில் உள்ள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த சவுரி ராஜன் என்பவர் செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் பணிக்கு மண் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி இருந்த தண்ணீரில் சிக்கி உள்ளாள். உடன் சென்ற சஞ்சனாவின் தோழிகள் காப்பாற்றும் முயற்சியில் சத்தம் போட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சஞ்சனாவை மீட்டு அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி சஞ்சனாவின் பெற்றோர்கள் கண்டமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி சஞ்சனா செங்கல் சூளை பள்ளத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்வதை ஏற்படுத்தி உள்ளது.