ராமேசுவரத்தில் சூறைக்காற்று ஓய்ந்தது: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.காற்றின் வேகம் குறைந்ததால் மீன்பிடி தடையை மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.
ராமேசுவரத்தில் சூறைக்காற்று ஓய்ந்தது: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் வீசிய சூறை காற்று காரணமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடி தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறை முகங்களில் இருந்து விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com