

அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி-கோவை மெயின்ரோட்டில் போலீஸ் நிலையம் அருகில் 70 ஆண்டுகாலமாக பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் பழைய பஸ்நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் இருந்தது.
எனவே அவினாசி கைகாட்டிப்புதூர் அருகே பஸ் நிலையம் மாற்றப்பட்டது. எனவே கடந்த 2018ம் ஆண்டு பாழடைந்த பழைய பஸ் நிலைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த இடத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பார்க்கிங் வசதியுடன் 3 தளங்கள் கொண்ட வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
பேரூராட்சிகளின் ஆணையாளர் உத்தரவின்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசனின் ஆலோசனைப்படி அந்த இடத்தில் கோவை சி.ஐ.டி. பல்கலைக்கழகத்தினர் மண்ணை தோண்டி எடுத்து பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ஆய்வகத்தில் மண்ணின் தரம் ஆய்வு உட்படுத்தப்பட்ட பின் கூடியவிரைவில்நவீன வசதிகளுடன் கூடிய வணிகவளாகம் கட்டுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.