கோவை ரேஸ்கோர்சில் 5 இடங்களில் வேகத்தடை

விபத்தை தடுக்கும் நோக்கில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்சில் 5 இடங்களில் வேகத்தடை
Published on

கோவை,

கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங் என உடற்பயிற்சிக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.

இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

ரேஸ்கோர்ஸ் சாலையும் புதுப்பிக்கப்பட்டு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இவ்வாறு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

ேவகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி ரேஸ்கோர்சை சுற்றியுள்ள சாலையில் 5 இடங்களில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர்.வேகத்தடைகளுக்கு பொதுமக்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் நடைபெற்று வந்தது.

வேகத்தடை அமைக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. மேலும் எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com