தஞ்சை மேலவீதி நவநீதகிருஷ்ணன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு

3 முறை கோவிலை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். குசேலன் பெற்ற குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நவநீதகிருஷ்ணன், அவல் முடிச்சு வைத்திருக்கும் பக்தர்கள்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நவநீதகிருஷ்ணன், அவல் முடிச்சு வைத்திருக்கும் பக்தர்கள்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மேல வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தா னத்தைச் சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

புண்ணிய நகராகிய துவாரகையில் எம் பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்து மணிமுடித்து மன்னராய் வீற்றிருந்த காலத்தில் வேதங்களை கற்று வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த குசேலன் தன் மனைவியின் வேண்டுதலின் பேரில் தன் பால்ய நண்பன் கிருஷ்ணரை காணச் சென்றார். கிருஷ்ணன் குசேலனை அன்பொழுக தழுவி வரவேற்று உபசரித்து விருந்து அளித்து மகிழ்வுடன் பேசி தனக்கு கொடுக்க கந்தல் துணியில் முடிந்த அவலை கேட்டு வாங்கி முகம் மலர்ச்சியுடன் இரண்டு கைப்பிடி உண்டவும் குசேலன் குடிசை விண்ணை தொடும் மாளிகை ஆனது. துவாரைக்கு நிகராக செல்வம் நிரம்பி வழியும் பெயர் பெற்ற நாள் அட்சய திருதியை என்று மக்களால் நம்பப்படுகிறது.

அன்றைய தினம் இக்கோவிலில் பக்தர்கள் அவரவர் கைகளால் மூன்று கைப்பிடி அளவு அவலை புது துணியில் அல்லது துண்டில் முடிந்து மூன்று முறை கோவிலை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். செல்வம் வளம் ஏற்படும். குசேலன் பெற்ற குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.அதன்படி இன்று காலை சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் தீபாரா தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அவல் முடிச்சு ஏந்தி மூன்று முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் அவல் முடிச்சு சமர்ப்பித்து தரிசனம் செய்தனர். சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அட்சய திருதியை வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com