search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு- மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

    • பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக அரசுக்கு நன்றி

    கூட்டத்தில் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்ததற்கும், நெல்லை மாநகர பகுதியில் பொருநை அருங்காட்சியகம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேருவுக்கும் நன்றி தெரிவிப்பது, பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், கோகுலவாணி, சங்கர் உள்ளிட்டோர் பேசும்போது, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் உந்துதல் மையத்தில் இருந்து நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவு நீர் உந்துதல் மையத்திற்கு செல்லும் குழாயை உடைத்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை 3-வது கட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றி அதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

    காரசார விவாதம்

    அதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடை பெற்றது. இதேபோல் மேலப்பாளையம் மண்டலத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ரசூல்மைதீன் உள்ளிட்டோர் பேசும்போது, பாளையங்கால்வாயில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.

    பாளை பகுதி கவுன்சி லர்கள் சிலர் பேசுகை யில், கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் நீராதாரமாக விளங்கும் அடிக்குழாய்கள் பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து கேட்டால் அதற்கான உபகரணங்கள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது போல் மண்டல அலுவலங்களிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றனர்.

    சிறப்புக்குழு

    கவுன்சிலர் உலகநாதன் பேசும்போது, டவுன் வ.உ.சி. தெருவில் அமைக்க ப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் பழுதடைந்து உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பதிலளித்து பேசிய மேயர் சரவணன் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு உருவாக்கி கண்காணிக்கப்படும். மண்டல அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை களில் மாலை நேரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுதாமூர்த்தி, கருப்பசாமி கோட்டை யப்பன், பவுல்ராஜ், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், ரவீந்தர், நித்திய பாலையா, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×