ஆண்டிபட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் கையில் சுற்றிய நல்ல பாம்பு

காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர். அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை மாணவனின் கையில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி;

தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே கன்னியப்ப பிள்ளை பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஷ் (வயது 14) கையில் சுற்றி கொண்டது.

இதனால் அலறியடித்த மாணவன் பதட்டத்தில் கையை உதறினார். இதனால் பாம்பு கையில் இருந்து கீழே விழுந்து ஓடிவிட்டது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் விக்னேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லாத நிலையில் மாணவனுக்கு ரத்த பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறிய தாவது:-

மாணவர் விக்னேஷ் பாம்பு கடித்து விட்டதாக பதட்டத்தில் அலறியதால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 24 மணி நேர பாதுகாப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சுகாதாரமற்ற காரணங்களால் இது போன்ற விஷ சந்துக்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பள்ளி வளாகங்கள் தூய்மையாக இருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com