search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாய்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
    X

    திருப்புவனம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் பகுதியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    கண்மாய்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர், துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட நெல் முடிக்கரை குரூப் திருப்புவனம் கண்மாயில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கண்மாயில் 4 மடைகள் உள்ளன. இதில் 4-வது மடையிலிருந்து கலியாந்தூர் பாசனப்பகுதி ஒரு பிரிவாகவும், நயினார் பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் ஒரு பிரிவாகவும், 4-வது மடையின் பின்புற தொட்டியில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

    இதில் நயினார்பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் (கரிசல் வாய்க்கால், மேட்டு வாய்க்கால் மற்றும் மாவடி பச்சேரி வாய்க்கால்) மடையின் 440-வது மீட்டரில் 4 பிரிவாக பிரிந்து செல்கிறது. பாசன நீரை பங்கீடு செய்வதில் நைனார் பேட்டை கிராமத்தினருக்கும், திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் கிராமத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.அதன்பேரில் கலெக்டர் திருப்புவனம் கண்மாய் 4-வது மடையில், நயினார்பேட்டை மற்றும் திருப்புவனம் பாசன விவசாயிகள் முன்னிலையில் கள ஆய்வு செய்தார்.

    மேலும் தட்டான்குளம் படுகை அணைக்கு கீழ் வலது பிரதான கால்வாயில் பழையனூர், பிரமனூர் மற்றும் 19 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் வைகை ஆற்றுக்கும் வலது பிரதான கால்வாய்க்கும் இடையில் உள்ள தடுப்புச்சுவர் வைகை ஆற்றில் ஏற்பட்ட ெவள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதையும், கலெக்டர் ஆய்வு செய்து சேதம் அடைந்த சுவற்றை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பாசன நீர் வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, பார்த்திபனூர் மதகணை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பாசன வசதி அளிக்கும் இடது பிரதான கால்வாயில் கலெக்டர் ஆய்வு செய்து முட்செடிகள் மற்றும் கருவேலை மரங்களை அகற்றும் பணிகளை, மழைக்காலத்திற்கு முன்பு தொடங்கவும், பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரை முறையாக சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது கீழ்வைகை வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிறிஸ்டர் நேசகுமார், நீர்வளத்துறை (சருகனியாறு, வடிநில கோட்டம்) செயற்பொறி யாளர் பாரதிதாசன், உதவிப்பொறியாளர்கள் பூமிநாதன், செந்தில்குமார், முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளார் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×