search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலூர்- காரைக்குடி 4 வழிச்சாலை பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்
    X

    மேலூர்- காரைக்குடி 4 வழிச்சாலை பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் தேசிய நெடுஞ்சாலை துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

    மேலூர்- காரைக்குடி 4 வழிச்சாலை பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்

    • மேலூர்- காரைக்குடி 4 வழிச்சாலை பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என சிவகங்கை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மேலூர் - காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி- தென்கரை சந்திப்பு சாலை, சுரண்டை கண்மாய், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மேலூர்- காரைக்குடி வரை 45.855 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 13.52 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கும் பணியும், சிவகங்கை மாவட்டத்தில் நைனார்பட்டி முதல் மானகிரி துக்கானேந்தல் வரை 32.33 கிலோ மீட்டர் சாலையும் ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 6 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 51-ம், 5 மீட்டர் நீளமுள்ள சிறு பாலங்கள் 16-ம், வாகனங்கள் சாலையின் அடியில் செல்லும் வகையான பாலங்கள் 14-ம், பெரிய பாலம் 9-ம், மேம்பாலம் 1-ம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. 16.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட மண் பரப்பும் பணியும், 13.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-ம் கட்ட மேல்மண் பரப்பும் பணியும், 10.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதற்கட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும், 8.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இறுதிகட்ட ஜல்லிக்கற்கள் பரப்பும் பணியும் முடிந்துள்ளது. 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.மொத்தமாக 24 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்த பணிகளை நிர்ணயித்துள்ள காலத்திற்குள் முடிக்க திறன்மிக்க பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×