search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிப்பு
    X

    பொரி தயாரிக்கும் பணி நடைபெறுகிறது

    ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிப்பு

    • சிங்கம்புணரியில் ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    சிங்கம்புணரி

    ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளன்று வீடுகள், தொழிற்சாலைகள் மெக்கானிக் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம்.

    அந்த வகையில். நாளை ஆயுதபூஜைக்கு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய பொரிக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொரி உற்பத்தியாளர்கள் ஆயுத பூஜைக்கான பொரி

    தயாரிப்பில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.

    பொரி தயாரிப்பிற்கு தேவையான அரிசி கர்நாடகத்தில் இருந்து ஐ.ஆர். 64 அரிசியும், கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது. ரசாயன கலப்படம் இல்லாமல் அரிசியில் தண்ணீர், சீனி, உப்பு உள்ளிட்ட பொருட்களின் விகிதாச்சார கலவைகளால் 3 தினங்கள் ஊற வைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் சரியான அளவு வெப்பத்துடன் மொரு மொரு தன்மையுடன் பொரி உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு தயார் செய்யப்படும் பொரி ஆயுதபூஜை மட்டுமின்றி விநாயகர்சதுர்த்தி, கோவில் திருவிழாக்கள் உள்பட வழிபாட்டிற்கும், தினசரி சாப்பிடும் உணவு பொருளாகவும் பயன்படுகிறது.

    தற்போது ஆயுத பூஜைக்காக ஒரு நாளைக்கு சுமார் 200 மூடை முதல் 300 மூடைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மூடையில் 120 லிட்டர் கொண்ட பொரி நிரப்பப்பட்டு அனுப்பப்படுகின்றன.

    ஒரு மூடை பொரி ரூ 480 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2, 3 தலைமுறைகளாக பொரி உற்பத்தி செய்துவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொரி உற்பத்தியாளா் சுந்தரசேகரன் கூறுகையில், சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரி சிங்கப்பூர், அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ''ஸ்டப் ரைஸ்'' என்ற பெயரில் அனுப்பப்படுகிறது.

    திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, மதுரை, தேனி, விருதுநகர் மாவடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. முக்கிய நகரங்களில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என்ற பதாகைகளுடன் விற்பனைசெய்யப்படுவது எங்கள் பொரிக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறோம் என்றார்.

    Next Story
    ×