

சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.