நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல்

காரைக்குடியில் நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல் பொதுமக்களிடம் கைவரிசை காட்டி வருகிறது.
மோசடி
மோசடி
Published on

காரைக்குடி

ஆதார் கார்டு, பான்கார்டு எண்கள் விவரங்களை பொதுமக்களிடம் செல்போனில் பேசி அதன் மூலம் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் நூதன மோசடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தற்போது அரங்கேறி வருகிறது. அந்த கும்பல் காரைக்குடியை சேர்ந்த 2 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளது. 

காரைக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ்பின் நிர்மலா. இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 30ந் தேதி குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் பான்கார்டு இணைக்கப்படவில்லை என்றும், உடனடியாக இந்த குறுந்தகவலில் உள்ள லிங்க்கில் சென்று பான்கார்டை இணைக்கும் படி தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து ஜோஸ்பின் நிர்மலா அந்த லிங்க்கில் சென்று தனது பான்கார்டு மற்றும் விவரங்களை பதிவு செய்துள்ளார்.  சற்றுநேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பறிபோனது. இதுகுறித்து  ஜோஸ்பின் நிர்மலா சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காரைக்குடி கண்ணதாசன்நகரை சேர்ந்தவர் அழகுமலை குருசாமி. இவருடைய செல்போனுக்கும் அதே போல் குறுஞ்செய்தி வந்தது. அவரும் குறிப்பிட்ட லிங்க்கில் சென்று விவரங்களை இணைத்துள்ளார். 

சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்தும் ஒரு லட்ச ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரிலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்த கும்பல் காரைக்குடியில் பலரது செல்போன் எண்களை பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செல்போனில் வரும் தகவல்களை நம்பி விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும், இது போன்ற விசயங்களில் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் போலீசார் எச்சரித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com