வைகை ஆற்றில் தடுப்பணை

மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.16.85 கோடியில் தடுப்பணை கட்டப்படுகிறது.
தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.16கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். சருகணியாரு வடிநில உபகோட்டத்தை சேர்ந்த மானாமதுரை நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள  வைகை ஆற்றின் குறுக்கே ரூ 16.85கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் திட்டத்துக்கான பூமிபூஜை விழா நடந்தது. 

கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பூமி பூஜையில் பங்கேற்று  தடுப்பணை கட்டும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

விழாவில் மானாமதுரை நகராட்சித்தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ.  எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு)அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தடுப்பணைத் திட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதன் மூலம் கீழப்பசலை, சங்கமங்கலம், ஆதனூர், மேலப்பசலை ஆகிய கண்மாய்களுக்கான விவசாய நிலங்கள் பயனடையும். 

செய்களத்தூர், கால்பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள  பாசனக்கிணறுகள் உள்ளிட்ட குடிநீர் ஆதார மோட்டார் கிணறுகளும் பயன்பெறும். இந்த தடுப்பணை மூலம் மேற்கண்ட கண்மாய்கள் மற்றும் பாசனக் கிணறு களால் 1700 ஏக்கர் விவசாயநிலங்கள் பயன்பெறும். 

மதுரை மாவட்டம்  விரகனூர் மதகு அணையில் இருந்து மானாமதுரை வரை மேலும் பல இடங்களில் தடுப்பணை கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும்  விரைவில் தொடங்கும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com