search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை- டிரைவர் இல்லாததால் ஆட்டோவில் செல்லும் இன்ஸ்பெக்டர்
    X

    ஆலங்குளம் காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை- டிரைவர் இல்லாததால் ஆட்டோவில் செல்லும் இன்ஸ்பெக்டர்

    • ஆலங்குளத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை உள்ளன.
    • ஆலங்குளம் போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமீப காலமாக போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிக்கப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை உள்ளன.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சனை

    ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் ஆலங்குளம் போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமீப காலமாக போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிக்கப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    புகார்

    இங்கு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தினேஷ் பாபு மீது லஞ்ச புகார் எழுந்ததை அடுத்து கடந்த மாதம் அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் சில தினங்களிலேயே கூடுதல் பணிக்காக திருச்செந்தூர் சென்று விட்டார்.

    இதனால் இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இல்லாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூலமாகவே பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் புகார்களும் சரிவர விசாரிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.


    ஆட்டோவில் செல்லும் இன்ஸ்பெக்டர்


    கடந்த 15-ந்தேதி மாயமான்குறிச்சி ஊராட்சி அலுவலத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தால் அ.தி.மு.க. பிரமுகரின் மண்டை உடைக்கப்பட்டது. போலீசார் அங்கு இருந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவர் இல்லாத காரணத்தால் அங்குள்ள இன்ஸ்பெக்டர் பணிகள் நிமித்தம் வெளியே செல்ல தனியார் ஆட்டோவையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் இல்லாத காரணத்தால் முக்கிய பணிகள் சுணக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த 2 போலீஸ் நிலையங்களுக்கும் கூடுதல் போலீசார் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்களும், போலீசாரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×