கணவர் ஓட்டி வந்த டிராக்டரில் சிக்கி மனைவி பலி: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் வாக்குவாதம்

கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டிராக்டரில் சிக்கி பலியான புஷ்பாவின் உடலை போலீசார் பார்வையிட்ட காட்சி. 
டிராக்டரில் சிக்கி பலியான புஷ்பாவின் உடலை போலீசார் பார்வையிட்ட காட்சி. 
Published on

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் கஜேந்திரன் (வயது 40).

விவசாயியான இவருக்கு திருமணமாகி புஷ்பா (33) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோசிகா என்ற மகளும் உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் விளை நிலத்தில் மாற்று பயிர் பயிரிட கஜேந்திரன் அவரது சொந்த டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கஜேந்திரனின் மனைவி புஷ்பா டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த புஷ்பாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கணவர் கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது உறவினர்கள் புஷ்பா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் திடீரென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இறந்த புஷ்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பா எதிர்பாராத விதமாக டிராக்டரில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது அவரது கணவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் புஷ்பாவின் கணவர் கஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com